Wednesday, August 19, 2009

கதக் - கசல் - கலை வெட்பம்.


கடந்த வார இறுதி நாட்கள் இந்திய கலாசார மன்றத்தின் உதவியால் கலை சார்ந்து கழிந்தது. அறுபத்தி ரெண்டாவது சுதந்திர நாளை கொண்டாட சனி இரவு கதக் நடனத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது இ.க.மன்றம்.

சேரிகளின் சகதியில் லொஜக் மொஜக் என்று வடிவேலு ஸ்டைலில் திரிந்த நமக்கு கதக் ரொம்ப புதுசு. இருந்தாலும் ஏதோ கலை பசியில் சென்றேன்.

வழக்கமான சமாச்சாரங்கள் முடிந்து நடனக்காரர்கள் கிருஷ்ணர் ராதை கதைக்கு வந்தார்கள். பக்தி இயக்கத்தின் காலத்தில் தோன்றிய கதக்கின் சிறப்பே இந்த கிருஷ்ணன் கதை தான். இந்திய இதிகாசங்கள் காமத்தை கொண்டாடியுள்ளது. காதலும், கூடலும் இறை வழிபாடாய் திகழ்ந்துள்ளது. இத்தகைய காமத்தை உணர்த்தும் வகையில் தங்கள்இரு உடலையும் செய் நேர்த்தியுடன் நடனக்காரர்கள் பம்பரமாய் சுற்றியமை அரங்கத்தையே கரஒலியில் கட்டி போட்டது .

திடீரென என் இரவுகளை ஆக்கிரமித்த இசையின் கசிவை கேட்டேன். அது மிர்சா காலிபின் உருது கஸல்!இத்தனை நாட்களாய் பாடலாக கேட்ட காலிபின் கஸலை இப்பொது கதக் வடிவில் பார்க்க போகிறேன் என்ற உணர்வே ஒரு பரவசத்தை கொடுத்தது.

உயிரை உறிஞ்சும் கசல் இசையும்,தீரா வெறியுடன் ஆடி தீர்த்த அவர்களின் காலும், யுகம் யுகமாய் தொடரும் ஆதி மனிதனின் கதை சொல்லும் இச்சையும்... கண்கலங்க வைத்தது.
கதை சொல்லியும், கேட்பவனும் கருவியாக மட்டுமே இருக்கிறான். கதைகள் தங்களை தாங்களே நிகழ்த்தி கொள்கின்றன.



குறிப்பு - இலங்கையின் இந்திய கலாச்சார மன்றத்துக்கு ஏன் வடஇந்திய கலைகள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது? வில்லு பாட்டும், கும்மியும், சிலம்பும், இந்தோனேசியா கலைகளா?

1 comment: